குன்றத்தூர்: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
ஆதி திருத்தணி என அழைக்கப்படும் குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 20 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து கோ பூஜை, மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது. இன்று திங்கள்கிழமை காலையில் யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் சிவாச்சாரியார்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், தாம்பரம் காவல் ஆணையர் ரவி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் ஆ.முத்து ரத்தினவேலு, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, குன்றத்தூர் நகர்மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்பட பலரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் சுற்றுப் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களாலும், ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், சங்கங்களும், தனியார்கள் சிலரும் கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் ஆகியனவற்றை வழங்கினார்கள்.
விடியோ இணைப்பு