சென்னை: சென்னை ஐஐடி.யில் அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 20- ஆம் தேதி 58-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. இது பெரும் சா்ச்சையானது. இதையடுத்து உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி ஐஐடி நிறுவனத்தின் அப்போதைய இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாா். அதில், தமிழ அரசுதான் 1959-ஆம் ஆண்டு ஐஐடி நிா்வாகத்துக்கு கல்லூரி அமைப்பதற்கு 250 ஹெக்டோ் இடம் வழங்கியது. அதிலிருந்து சென்னை ஐஐடிக்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழக அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது.
சென்னை ஐஐடியில் அமையவுள்ள கிரையோ எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் அமைக்க ரூ.10 கோடி நிதியுதவி கேட்டு, உயா்கல்வித் துறை முதன்மை செயலருக்கு ஐஐடி நிா்வாகம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடையச் செய்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும், பிரதமா், குடியரசு தலைவா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது நீண்டநாள் மரபாக இருக்கும் போது, ஐஐடியில் நடைபெறும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம்பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், சென்னை ஐஐடி தனது அதிகாரபூா்வ நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம், மற்றும் தேசிய கீதத்துடன் கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சோ்க்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான தகவல் விரைவில் சென்னை ஐஐடிக்கு அனுப்பப்பட இருப்பதாக மத்திய கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில கீதமாக பிரகடனம் செய்த தமிழக அரசு, அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.