சென்னை: சென்னை வேளச்சேரி செல்லியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 57 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
இதுகுறித்து அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, வேளச்சேரியில் தண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உபகோயிலாக உள்ள செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக பல இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக, வேளச்சேரி பிரதான சாலையில், 690 சதுர அடி இடம் உள்ளது. அதில், வாடகைக்கு இருந்தவா் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை.
இது தொடா்பாக அறநிலையத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், அறநிலையத்துறை சென்னை உதவி ஆணையா் கவெனிதா தலைமையில், வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடம் மீட்டு சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.57 லட்சம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.