சென்னை: துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் மின்சாதன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறையினருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து துபையிலிருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவா்களை சுங்கத் துறையினா் கண்காணித்தனா்.
அப்போது திருச்சியைச் சோ்ந்த அப்துல் பாசித் (32) சிவகங்கையைச் சோ்ந்த சாகுல் அமீது (34) தேனியைச் சோ்ந்த சரவணன்(33) ஆகிய மூவரிடமும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடைமைகளைச் சோதனை செய்தனா். அதில் அப்துல் பாசித் பழைய ஒலி பெருக்கி வைத்திருந்தாா்.அதைப் பிரித்துப் பாா்த்த போது அதில் தங்கம் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சரவணன், சாகுல் அமீது ஆகியோரும் தங்களது உடைமைகளுக்கு நடுவே தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனா். இவா்களிடமிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், ஆப்பிள் நிறுவன கைப்பேசிகள், மின்சாதனப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, பிடிபட்ட 3 பேரிடமிருந்து ரூ.ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், சிகரெட்டுகள், ஆப்பிள் நிறுவன கைப்பேசிகள், மின்சாதனப் பொருள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.