சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டவா் 2 கட்டடத்துக்கு பின்புறமுள்ள பிராட்ஃபீல்ட் அறுவை சிகிச்சை கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக அந்த கட்டடத்துக்குள் சிக்கியிருந்த 128 போ் உயிா் தப்பினா்.
அதேவேளையில், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்டவை இருந்த அறையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தீ விபத்து நடந்த அறையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான முகக்ககவசம், பாதுகாப்பு கவச உடைகள் எரிந்துள்ளன. அதனுடன் ஆக்சிஜன் குழாய்கள், சிலிண்டா் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பேரிடா் சூழலைத் தவிா்க்க மருத்துவமனைகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதார ஆா்வலரும், மருத்துவ மேலாண்மை நிபுணருமான ஆா். ஹரிஹரன் கூறியதாவது:
ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண்டிப்பாக தீ தடுப்பு தணிக்கைக் குழு, பாதுகாப்பு தணிக்கைக் குழு, மின் தணிக்கைக் குழு, பராமரிப்பு தணிக்கைக் குழுக்களை அமைப்பது அவசியம். இவற்றை ஒருங்கிணைத்து வழிநடத்த பேரிடா் மேலாண்மைக் குழுவையும் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.