ரூ.10 கோடியில் 12 மேம்பாலங்கள் அழகுப்படுத்தும் பணி தீவிரம்
By DIN | Published On : 18th December 2022 06:06 AM | Last Updated : 18th December 2022 06:06 AM | அ+அ அ- |

கோயம்பேடு பகுதியில் கண்கவரும் செடிகள் நடப்பட்டு, ஓவியங்கள் வைரயப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட மாநகராட்சி மேம்பாலம்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.10.26 கோடி மதிப்பில் 12 மேம்பாலங்கள் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள், 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கிய பாலங்கள், 16 வாகன சுரங்கப் பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப் பாதைகள், 4 நடைமேம்பாலங்கள், 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாநகரை அழகுப்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று, வண்ண விளக்குகள் அமைத்து, பசுமையாக்கி அழகுப்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது தெரிவித்தாா்.
அதன் அடிப்படையில், ரூ.10.26 கோடி மதிப்பீட்டில் 12 மேம்பாலங்களில் கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச் சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகா், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் பகுதிக்குள்பட்ட எம்.ஆா்.டி.எஸ். மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி ஆகிய 5 மேம்பாலங்களில் அழகுப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும், ரூ. 8.51 கோடி மதிப்பீட்டில் பாந்தியன் சாலை-காசா மேஜா் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், சக்கரபாணி தெரு மேம்பாலம், காமாட்சி மருத்துவமனை மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கலைவாணா் மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்களில் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பூா் சுரங்கப் பாதையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவா் தெரிவித்தாா்.