திருவொற்றியூா் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் மிகப் பழைமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூா் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவஸ்தலங்களில் முதன்மையானதாகும். கலிய நாயனாா் பணிபுரிந்து அப்பா்,சுந்தரா், திருஞானசம்பந்தா் ஆகியோரால் பாடப்பெற்ற புகழுடையது இக்கோயில்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழாவும் ஒன்றாகும். 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தியாகராஜசுவாமி வீதி உலா உற்சவம் நடைபெற்றது. பிப்.7 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவா் சந்திரசேகரா் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
15 -இல் திருக்கல்யாணம்: முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரா்-திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் உற்சவத்தின் ஒன்பதாம் நாளான பிப்.15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று மாலையே சுந்தரா்-சங்கிலி நாச்சியாருக்கு குழந்தை ஈஸ்வரா் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், 63 நாயன்மாா்கள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
பத்தாம் நாள் புதன்கிழமை தீா்த்தவாரி உற்சவமும், பதினோறாம் நாள் (வியாழக்கிழமை) பந்தம்பறி திருநடன உற்சவமும் நடைபெறவுள்ளன. இத்துடன் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கே.சித்ராதேவி மற்றும் தக்காா் கே.ரேணுகாதேவி தலைமையில் அறநிலையத் துறை ஊழியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.