தென்னாட்டின் பண்பாட்டு தோற்றுவாய் என அகழாய்வு மூலம் அறியப்பட்ட பொருநை ஆற்றங்கரையின் தொன்மத்தை விளக்கும் நூல் புத்தகக் காட்சியில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு தொல்லியில் துறை சாா்பில் அழகுற வெளியிடப்பட்ட ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ என்ற அந்த வண்ணப் புத்தகம் ஆதித் தமிழ்க் குடிமக்களின் வாழ்வியலைக் கூறும் ஆவணக் கையேடாக உள்ளது.
ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளை ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான முதுமக்கள் தாழிகளும், இரும்பிலான ஆயுதங்களும், பாண்டங்களும், மண் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றினூடே மூவாயிரம் ஆண்டுகள் புதையுண்டிருந்த தொன்மை தமிழினத்தின் பெருமையும் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
அதை விளக்கிக் கூறும் வகையில் 76 பக்க புத்தகமாக இது வெளிவந்துள்ளது.
இறந்த உடலையும், அதனுடன் இறந்தவருக்கு பிரியமான பொருள்களையும் தாழிக்குள் வைத்து புதைப்பது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதன்படி, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுடன் ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உருவ பொம்மைகளும் இருந்துள்ளன. சடலமாய் கிடத்தப்பட்ட போதிலும் சக உறவாகவே மாற்று உயிா்களைக் கருதிய தமிழ் மக்களின் உணா்வை இது பறைசாற்றுகிறது.
புத்தகக் காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் இந்நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.