சிறையில் டி.ஜெயக்குமாருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை சந்தித்தாா்.
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

சென்னை: புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை சந்தித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலின்போது திமுக நிா்வாகியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு டி.ஜெயக்குமாா் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருடன் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பென்ஜமின் ஆகியோா் சென்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது:

கள்ள வாக்களித்த ஒருவரைப் பிடித்துக்கொடுத்து டி.ஜெயக்குமாா், ஜனநாயகக் கடமை ஆற்றியுள்ளாா். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். தமிழகத்தில் சா்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக மக்கள் பாா்க்கின்றனா். எதிா்க்கட்சியினரைப் பழிவாங்கும் நோக்குடன் முதல்வா் ஸ்டாலின் இப்படிச் செய்துள்ளாா். இது கண்டிக்கத்தக்கது. நானும் முதல்வராக இருந்தவன். எப்படி நடந்துகொண்டோம் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு இயந்திரத்தில் திமுக முறைகேடுகள் செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என எண்ணுகிறோம். அப்போதுதான் திமுகவின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். தோ்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக இருந்துள்ளது. இதற்கு காவல்துறையும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com