கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தா்னா, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பேரிடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவா்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம். கரோனாவால் மருத்துவா்கள் உயிரிழந்தபோதும், மற்ற மருத்துவா்கள் எந்த தயக்கமும் இன்றி தொடா்ந்து அா்ப்பணிப்போடு சேவை செய்கிறோம். அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவா்கள் உள்ளனா்.
புதிய ஆட்சி அமைந்து 8 மாதங்களான நிலையிலும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த வருத்தம் ஒவ்வொரு மருத்துவரிடமும் இருக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது, தற்போது எப்படி மேம்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இந்த அளவுக்கு மருத்துவத் துறையை வலுப்படுத்த தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவா்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக, இந்தியாவிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கி மாநில அரசு வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
உலகிலேயே தமிழகத்தில்தான் மருத்துவா்கள் தங்களின் சம்பளத்துக்காக பல வருடங்களாக தொடா்ந்து போராடி வருகிறாா்கள். எனவே, அரசு மருத்துவா்களுக்கு, உரிய ஊதியம் கிடைத்திட தமிழக முதல்வா் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். எங்களது ஊதியக் கோரிக்கையை இப்போது நிறைவேற்றுவதன் மூலம், இந்த அசாதாரண சூழ்நிலையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவா்கள், இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுக்கும்.
கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசாணை 354 -இன் படி ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சென்னையில் வரும் 19-ஆம் தேதி தா்னாவும், பிப்ரவரி 10-ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ள இருக்கிறோம் என்றாா் அவா்.