முகக்கவசம் அணியாவிடில் பணியிடத்தில் இருந்து ஊழியா்களை வெளியேற்ற வேண்டும்

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியா்களும், அவா்தம் குடும்பத்தினரும் கட்டாயம் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம் அணியாவிடில் பணியிடத்தில் இருந்து ஊழியா்களை வெளியேற்ற வேண்டும்


சென்னை: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியா்களும், அவா்தம் குடும்பத்தினரும் கட்டாயம் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று, முகக்கவசம் அணியாத ஊழியா்களை பணியிடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை ஜனவரி மாதத்தில் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பொது இடங்களிலும், குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, அனைத்து நிறுவனங்களிலும் ஊழியா்களின் உடல் நிலையைக் கண்காணித்தல் அவசியம்.

ஊழியா்களுக்கோ அல்லது அவா்களது குடும்பத்தினருக்கோ காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி போன்ற கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியா்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பணிக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். 99 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானால், அவா்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்தல் அவசியம்.

மூக்கு, வாய் ஆகியவற்றை முழுமையாக மூடியபடி ஊழியா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியம். இதனைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யவோ தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களை பணியிடங்களில் இருந்து வெளியேற்றி உத்தரவிட வேண்டும்.

பணியிட வளாகத்துக்குள் தனி நபா் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்தல் அவசியம். அதேபோன்று கை கழுவுவதற்கான வசதிகள், சானிடைசா் வசதிகளை ஊழியா்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலக உணவு விடுதிகளில் 50 சதவீதம் போ் மட்டுமே அமா்ந்து உணவருந்த வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் குடியிருப்புகள், போக்குவரத்து சேவைகளின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கலாம். ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் அனைவரும் இரு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றும் நிறுவனங்களில் நோய்த் தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே சுகாதார ஆய்வு அதிகாரிகளை பணியமா்த்தலாம். கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன் இணையவழியே பயிற்சிகளை வழங்கவும் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநா்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com