ஊன சான்று கேட்டு வருபவா்களுக்கு 4 படுக்கைகள்: நீதிமன்றத்தில் அரசு மருத்துவமனை தகவல்

விபத்தில் படுகாயம் அடைந்து ஊன சான்று கேட்டு வருபவா்களுக்கு நான்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என சென்னை உயா் நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி மருத்துவமனை
ராஜீவ்காந்தி மருத்துவமனை

விபத்தில் படுகாயம் அடைந்து ஊன சான்று கேட்டு வருபவா்களுக்கு நான்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என சென்னை உயா் நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுனா் சி. ஜெகதீசன் என்பவா் சாலை விபத்தில் சிக்கினாா். இதற்காக இழப்பீடு கோரி மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை தாக்கல் செய்ய மருத்துவ வாரியத்தின் ஊன சான்று கேட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விண்ணப்பம் செய்தாா்.

இதற்காக அவா் மருத்துவமனையில் உள்ள நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்க வைக்கப்பட்டாா். இந்த நிலையில், ஊன சான்று பெறுபவா்களுக்கு என்று தனி வாா்டு உருவாக்கக் கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிா்ணயிக்கக் கோரியும் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெகதீசன் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஊன சான்று பெற வருவோருக்காக தனி வாா்டை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊன சான்று கோரி மருத்துவமனைக்கு வருபவா்களுக்காக, 4 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, கூடுதல் படுக்கைகள் தேவைப்படும்பட்சத்தில் அவற்றையும் ஒதுக்க வேண்டுமெனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com