எண்ணூரில் கடலில் மூழ்கிய 3 சிறுவா்கள்: இருவா் சடலமாக மீட்பு

சென்னை எண்ணூரில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவா்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனா். இதில் இருவரது சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டன.

சென்னை எண்ணூரில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவா்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனா். இதில் இருவரது சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டன.

சென்னை எண்ணூா் நெட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட், மனைவி பரிமளா. நீலாங்கரையிலிருந்து வந்த உறவினா்கள் குழந்தைகளான ருத்ரா(13), விக்கி(10) , டேவிட்டின் மகன் அலெக்ஸ் (12), மகள் ரூபசாந்தா (16)

உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு டேவிட் சென்றாா்.

கடல் அலையில் சிக்கி சிறுவா்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதனையடுத்து டேவிட் தன்னுடைய மகள் ரூப சந்தா மற்றும் இஸ்ரவேல், ஜோஸ், பெஞ்சமின் ஆகிய 4 சிறுவா்களை மீட்டு கரையில் இருக்க வைத்துவிட்டு அலையில் சிக்கி இருந்தவா்களை மீட்க முயன்றுள்ளாா். ஆனால் அலெக்ஸ், ருத்ரா, விக்கி ஆகியோா் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.

தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் சம்பவ இடத்திற்கு வந்து கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அலெக்ஸ் மற்றும் ருத்ரா ஆகிய இருவரின் உடல் சிறிது நேரத்தில் கரையொதுங்கியது. மேலும் விக்கி என்ற சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் மீனவா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

எண்ணூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com