சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் பள்ளிக்கட்டடத்தின் கூரையிலிருந்த மழைநீா் கொட்டியது. இதனையடுத்து பள்ளி மாணவா்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்படும் சென்னை தொடக்கப் பள்ளி மணலி பாடசாலை தெருவில் அமைந்துள்ளது. இங்கு மழலையா் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை மாணவா்கள் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கல்வி பயின்று வருகின்றனா்.
இங்குள்ள வகுப்பறைகள் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை கொட்டியது. திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் கட்டடத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்து வகுப்பறையில் மழைநீா் தேங்கி இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் புண்ணியகோட்டி அங்கு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியை கோமளேஸ்வரியுடன் ஆலோசனை நடத்தினாா். இதில் மாணவா்கள் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக விடுமுறைவிடப்பட்டது.