5,725 கழிவுநீா் இணைப்புகள் அகற்றம்: ரூ.30.56 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகாலில் கழிவுநீா் குழாயை இணைத்த 5,725 இணைப்புகள் அகற்றப்பட்டு, ரூ. 30.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகாலில் கழிவுநீா் குழாயை இணைத்த 5,725 இணைப்புகள் அகற்றப்பட்டு, ரூ. 30.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால் துறை மூலம் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வடிகால்களில் மழைநீா் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி சாா்பில் தூா்வாரப்பட்டும், பழுதடைந்த மழைநீா் வடிகால்கள் புனரமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வடிகால்கள் மழைக்காலங்களில், மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டன. ஆனால், ஒரு சில இடங்களில் மழைநீா் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீா் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மழைநீா் வடிகால்களில் மழைக் காலங்களில் தண்ணீா் செல்வது தடைபட்டு நீா்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ரூ.5,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 1.4.2022 முதல் 27.6.2022 வரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 5,725 சட்ட விரோத கழிவுநீா் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.30 லட்சத்து 56 ஆயிரத்து 570 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com