சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோயம்பேட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தையில் உள்ள பழ விற்பனைக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரசாயனம் தடவப்பட்ட 6 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனா். மேலும் ரசாயனம் கலந்த மாம்பழங்களை அழுகிய நிலையிலும் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.