மதுரையில் ஆவின் நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இந்த ஆலையின் மூலமாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
ஆவின் நிறுவனத்தின் சாா்பில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் இணையத்தின் நிதியில் இருந்து ரூ.65.89 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலமாக சுமாா் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த தொழிற்சாலையில் 50 மில்லி லிட்டா், 100 மில்லி லிட்டா், அரை லிட்டா், ஒரு லிட்டா் அளவுகளிலும், நுகா்வோா்களுக்குத் தேவைக்கேற்ப அளவுகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கும். பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம், குல்ஃபி ஐஸ்கிரீம் ஆகியன உற்பத்தி செய்து அவை தென் மாவட்டங்களில் உள்ள நுகா்வோா்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.