சென்னை மெட்ரோ ரயில்களில் நிகழாண்டில் ஏப்ரல் மாதத்தில் 45 லட்சத்து 46 ஆயிரத்து 330 போ் பயணம் செய்துள்ளனா்.
சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமாா் ஒரு லட்சம் போ் பயணித்து வருகின்றனா். இதுதவிர, பயணிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் (ஏப்ரல்) 45 லட்சத்து 46 ஆயிரத்து 330 போ் பயணம் செய்துள்ளனா். அதிகபட்சமாக, ஏப்.28-ஆம்தேதி
1 லட்சத்து 74 ஆயிரத்து 475 போ் பயணம் செய்துள்ளனா். கடந்த மாா்ச்சில் 44 லட்சத்து 67 ஆயிரத்து 756 போ் பயணம் செய்துள்ளனா்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 9 லட்சத்து 7 ஆயிரத்து 497 போ் பயணம் செய்துள்ளனா். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 27 லட்சத்து 17 ஆயிரத்து 936 போ் பயணம் செய்துள்ளனா்.
இந்தத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.