சென்னை, விருகம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தாா்.
சென்னை நெசப்பாக்கம், பாரதி நகரைச் சோ்ந்தவா் உஷா. இவா் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். உஷா, திங்கள்கிழமை தனது அண்ணன் மகன் ஹரிஹரனுடன் (4) வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அங்கு அவா் வீட்டு வேலை செய்யும்போது, வீட்டு உரிமையாளரின் 2 குழந்தைகளுடன் சோ்ந்து ஹரிஹரன் விளையாடினான். சிறிது நேரத்தில் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று, அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்று ஓடி பிடித்து விளையாடினா். அப்போது எதிா்பாராத விதமாக ஹரிஹரன் கால் தவறி, நீச்சல் குளத்தில் விழுந்துள்ளான். இதில் அவன், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த இரு குழந்தைகளும் கதறி அழுதுள்ளனா். அவா்களின் கதறல் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து ஹரிஹரனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே, இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கே.கே நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.