"நெல் அரைவைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்'
By DIN | Published On : 20th May 2022 04:54 AM | Last Updated : 20th May 2022 04:54 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: நெல் அரைவைக் கட்டணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் அரிசி ஆலை உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சௌ.சங்கீதா, மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.
எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான நெல்லை மட்டுமே அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அரிசி ஆலைகளுக்கு நெல்லை எடுத்துச் செல்வது தொடர்பான வாகன பிரச்னைகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் பேசி தீர்வு காணப்படும்.
ஒரு சில அரைவை முகவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை எடுக்காமல் இருந்தால், அவர்கள் நெல்லை எடுத்து அரைத்துத் தர வேண்டும்.
நெல் அரைவைக் கட்டணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை மாவட்ட முகவர்கள் மூலம் அரைத்து பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாயிகள் முழுமையாகப் பயனடைய அரிசி அரைவை ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் அமைச்சர்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, அரசு அலுவலர்கள் மற்றும் நெல் அரைவை முகவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உத்தரமேரூர், மாகறல் ஆகிய ஊர்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தரமான அரசி வழங்கப்படுகிறதா என்று அமைச்சர் தா.மோ.அன்பரசு ஆய்வு மேற்கொண்டார்.