வணிக தளத்தில் நவீன புதுமைகளுடன் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கலாம் என ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில் "பாரம்பரியத்தை சந்திக்கும் நவீன தலைமைத்துவம்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் "பாரம்பரியம் மற்றும் நவீன தலைமைத்துவம் எவ்வாறு இணைந்து செயல்படலாம்?', "இன்றைய மாறும் வணிகத்தில் முன்னோக்கு பார்வை' ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, புத்தொழில் மேற்கொள்வோர் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் "எம்.எஸ்.எம்.இ. வழிகாட்டி' எனும் கையேடு வெளியிடப்பட்டது. பின்னர் பேசிய ஹெச்.சி.எல். டெக். தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, "வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வணிக தளத்தில், உண்மையான தலைமைத்துவம் என்பது நவீன காலத்தின் புதுமைகளுடன், நமது பாரம்பரியத்தின் அறிவை தடையின்றி இணைப்பதாகும். சமகால சவால்களுக்கு தகுந்தபடி, நமது பாரம்பரியத்தை பயன்படுத்துவதன் மூலம் நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்க முடியும்' என்றார்.
தொடர்ந்து பேசிய "ஃபிக்கி எஃப்.எல்.ஓ. சென்னை' தலைவர் திவ்யா அபிஷேக், "எம்.எஸ்.எம்.இ., வழிகாட்டி' கையேடு தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும், அவர்கள் வெற்றிபெறத் தேவையான கருவிகளை வழங்குவதற்கும் உதவும் என்றார்.