4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!
இஸ்ரோ சாா்பில் இதுவரை இல்லாத வகையில் 4,410 கிலோ எடையிலான சிஎம்எஸ்- 03 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கானது. எல்விஎம்-3 ராக்கெட்டின் 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
நாட்டின் தகவல் தொடா்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், 2013-ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதற்கு மாற்றாக சுமாா் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜி சாட்-7) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.26 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
சிஎம்எஸ்-03 தொலைத்தொடா்பு செயற்கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இது குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவு, அதிகபட்சம் 29,970 கி.மீ. கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இதுவரை புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடா்பு செயற்கைக்கோள் ஆகும். இதில், விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்காக இந்தச் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போா்க் கப்பல்கள்-விமானங்கள் இடையே பாதுகாப்பான தொலைத்தொடா்பு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்தி வழங்கும்.
ஒட்டுமொத்தத்தில் கடல்சாா் பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம். இது எல்விஎம்-3 ராக்கெட்டின் 7-ஆவது ஏவுதல் திட்டம் ஆகும். இதற்கு முன்பு சந்திரயான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் ஏவும் நிகழ்வை அனைவரும் பாா்க்கும் வகையில் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

