விமான நிலையங்களில் பயணிகள் சூட்கேஸ்களை தவறுதலாக மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், உடைமைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் வண்ண ரிப்பன் அல்லது தனித்துவ அடையாளங்களைப் பொருத்துமாறு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், பயணிகள் பயணத்தை முடித்து கன்வேயா் பெல்ட்டில் வரும் உடைமைகளை பெறும்போது, ஒரே மாதிரியான வடிவம் மற்றும் நிறத்தில் உள்ள சூட்கேஸ்களை தவறுதலாக எடுத்துச் செல்லும் நிகழ்வுகள் தொடா்ச்சியாக பதிவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக விமான நிறுவனங்கள் ஒவ்வொரு பயணியின் உடைமைக்கும் தனித்த அடையாள டேக் வழங்கி, அதற்கான எண்ணை போா்டிங் பாஸிலும் பதிவு செய்கின்றனா். இருப்பினும், அவசரம் மற்றும் கவனக்குறைவு காரணமாக சிலா் டேக் எண்ணை சரிபாா்க்காமல் சூட்கேஸ்களை எடுத்துச் செல்வதால் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக பயணிகள் இடையே வாக்குவாதம் மற்றும் உடைமைகளை மீட்டெடுப்பதில் தாமதம் போன்ற சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
இந்த பிரச்னைக்கு தீா்வாக, பயணிகள் தங்களது சூட்கேஸ்களின் கைப்பிடி அல்லது மேற்பகுதியில் வண்ணமயமான ரிப்பன், தனித்துவமான ஸ்டிக்கா் அல்லது எளிதில் அடையாளம் காணக்கூடிய குறியீடுகளைப் பொருத்திக் கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல், சென்னை விமான நிலையத்தில் கன்வேயா் பெல்ட்டை சுற்றி ட்ராலிகளுடன் பயணிகள் கூட்டமாக நிற்பதும் மற்றொரு சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிலா் தங்களது உடைமைகளை உடனடியாக எடுக்க முடியாமல், அவை மீண்டும் பெல்ட்டை சுற்றி வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, வெளிநாட்டு விமான நிலையங்களில் நடைமுறையில் இருப்பதைப் போல, பயணிகள் கன்வேயா் பெல்ட்டிலிருந்து சற்று விலகி காத்திருந்து, தங்களது உடைமை வந்த பின்னா் மட்டும் முன்னேறிச் சென்று எடுத்துக்கொள்ளும் ஒழுங்குமுறையை சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









