உத்தரமேரூர் அருகே ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் (25). சென்னையில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கண்ணகி. இத் தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த ஸ்டீபன்ராஜ், அருகில் உள்ள பேரணக்காவூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜும் (24), இவர்களுடன் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது, ஸ்டீபன்ராஜுக்கும், பால்ராஜுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பால்ராஜும், அவரது நண்பர்களும் அங்கு கிடந்த கட்டையால் ஸ்டீபன் ராஜை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் ராஜ் கீழே சாய்ந்தார். இதைப்பார்த்த பால்ராஜ் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, ஸ்டீபன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்டீபன்ராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், பால்ராஜையும், அவரது நண்பர்களையும் கைது செய்யக்கோரி, ஸ்டீபன் ராஜின் உறவினர்கள் பேரணக்காவூர் - திருமுக்கூடல் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சாலவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.