காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பிப்ரவரி 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலைப் போட்டிகளானது, மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள், குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறவுள்ளன. அதன்படி, குரலிசை, பரதநாட்டியப் போட்டிகள் காலை 10 மணிக்கும் ஓவியம், நாட்டுப்புற நடனப்போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். இப்போட்டிகள், 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெறவுள்ளன.
போட்டிக்கான விதிகள்: குரலிசை (வாய்ப்பாட்டு-காலை 10 மணி): மாணவர்கள் தனியாக குரலிசை பாடவேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 நிமிடம் அனுமதிக்கப்படும். இசையை முறையாக பயின்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் தமிழ் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்கள், தேசப்பக்தி பாடல்கள் பாடலாம். திரைப்பாடல்களுக்கு அனுமதியில்லை.
பரதநாட்டியம்-காலை 10 மணி: பரதநாட்டியத்தை முறையாக பயின்றோர் பங்கேற்கலாம். முழு ஒப்பனை, உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் அவசியம். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 நிமிடம் அனுமதிக்கப்படும். குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்கள், ஒலி நாடாக்கள், குறுந்தகடுகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, போட்டியில் பங்கேற்போரே கருவிகளை (நவீன செல்லிடப்பேசி) ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
நாட்டுப்புற நடனம்: பிற்பகல் 2 மணி: ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 நிமிடம் அனுமதிக்கப்படும்.
முழு ஒப்பனை, உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை போட்டியில் பங்கேற்போரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஓவியம்-பிற்பகல் 2 மணி: 40-க்கு 30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களை பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என அனைத்து வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளிகளிலிருந்து பிறந்த தேதி, வயது சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அதுகுறித்த விவரங்கள் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு வென்றவர்களுக்கு, பின்னர் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், 9-12, 13-16 வயது பிரிவுகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவர்.
இந்த போட்டிகளானது, மண்டலக் கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், சதாவரம் (காது கேளாதோர் பள்ளி அருகில்),
காஞ்சிபுரம். மேலும் விவரங்களுக்கு 044-27290735,27268190 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.