மதுராந்தகம் நகரில் பேருந்து பயணிகளுக்கும், நகர மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் விதமாக நகர திமுக சார்பாக வெள்ளிக்கிழமை நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் நிலவேம்பு கஷாயத்தை வழங்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், நகர மக்களுக்கும் நிலவேம்பு கஷாயத்தை வழங்க நகர திமுக சார்பாக ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தலைமை வகித்து, நிலவேம்பு கஷாயத்தை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகராட்சி மன்ற முன்னாள் தலைவர் மலர்விழிகுமார், நகர செயலர் கே.குமார், நகர திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்நிகழ்வில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் நகர திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.