கஜா புயல் கரையைக் கடந்ததை அடுத்து மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்ததாலும், சூறைக்காற்று வீசியதாலும், மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கஜா புயல் தாக்கத்தை தொடர்ந்து மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
மக்களை அச்சுறுத்தும் வகையில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் கடலோரப் பகுதியான மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புருஷம்குப்பம், தேவனேரி, சூளேரிகாட்டுக்குப்பம், நெம்மேலிகுப்பம், சதுரங்கப்பட்டினம் குப்பம், புதுக்கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடற்கரையில் இருந்து மீன்பிடி விசைப்படகுகளை கரைக்கு இழுத்து வந்து பாதுகாப்பாக நிறுத்தினர். மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பாக எடுத்து வந்து வைத்தனர். மீனவர்கள் கடலோர மீனவக் குப்பங்களில் தங்களது குழந்தைகளுடன் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரையில் அலைகள் சீற்றத்தின் காரணமாக 12 அடி உயரத்திற்கு மேல் கரை அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளங்களை உருவானது. கடற்கரை மணலை அடித்துச் செல்லும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகளை கடலில் குளிக்க மாமல்லபுரம் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.