காஞ்சிபுரத்திலுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் சாரதா நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காமாட்சியம்மன் கோயில் கொலுமண்டபத்தில் நாள்தோறும் மாலை வேளையில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்கள், பிரபல சங்கீதக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நாள்தோறும் படவேட்டம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் 5ஆவது நாளையொட்டி படவேட்டம்மன் புற்றுத் தோற்றத்தில் எழுந்தருளினார். அதேபோல், ரேணுகாம்பாள் கோயிலில் விஷ்ணு துர்கை அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் உள்ள தும்பவனத்தம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.1, ரூ.5, ரூ.10 சில்லறைக் காசுகளில் மாலையாகவும், ரூ. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று புதிய ரூபாய் நோட்டுகளைக் கோர்த்து பணமாலையாகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அனைத்து அம்மன்களுக்கும் நாள்தோறும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களுக்கு வரும் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.