மீட்கப்பட்ட அமெரிக்கப் பெண் காப்பகத்தில் சேர்ப்பு

காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்ட அமெரிக்கப் பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்ட அமெரிக்கப் பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
 இதுகுறித்த விவரம்: அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் கெலா (26). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அடுத்த ஓரிரு மாதங்களில் கருத்து வேறுபாட்டால் விமலை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
 இந்நிலையில், அவர் கடந்த புதன்கிழமை சுயநினைவின்றி குடிபோதையில் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளை கேட் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் ஆடைகளின்றி விழுந்து கிடந்தார். இதுதொடர்பாக, தகவல் அறிந்து கிராமிய, மகளிர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
 அங்கு, மகளிர் போலீஸார் கெலாவை பாதுகாப்புடன் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், "சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபரிடம் உதவி கேட்டேன்.
 இருசக்கர வாகனத்தில் வரும் வழியில் காஞ்சிபுரம் அருகே இருவரும் மது அருந்தினோம். பிறகு, குடிபோதையில் மயங்கிவிட்டேன்' என்று கெலா தெரிவித்தார். தனது கணவர் விமல் குறித்தும் போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 இதையடுத்து, வேளச்சேரி போலீஸாருக்கு இது தொடர்பாக வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீஸார் விமல் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு விமலும், அவரது தாயாரும் வீட்டைக்காலி செய்துவிட்டு சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
 இதையடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலை, பனையூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் அமெரிக்கப் பெண் கெலாவை போலீஸார் வெள்ளிக்கிழமை சேர்த்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com