மழை பெய்த போதிலும் மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி பழங்கால சிற்பங்களை கண்டு ரசித்தனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்துக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்த படியும், சிலர் கையில் குடை பிடித்துக் கொண்டும் அர்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் , ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில் சிற்பங்களை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
மழை காரணமாக பாறைகள் வழுக்கும் வாய்ப்புகள் இருப்பதால், பழைய கலங்கரை விளக்கம் மற்றும் குன்று பகுதிகளில் மேலே ஏறிச்செல்லாமல், கீழே நின்றபடியே சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். எனினும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் வெளியேற கால்வாய்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.