மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து செங்கல்பட்டைச் சேர்ந்த 2 ரௌடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டில் கடந்த ஜூலை 24ஆம் தேதியன்று குள்ளசீனு என்பவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான செங்கல்பட்டு கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரின் மகன் வினோத் என்ற பீட்டர் (25), நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச்சேர்ந்த குமார் என்பவரின் மகன் அசோக் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, அவர்கள் வேறு பல வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
எனவே, இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி பரிந்துரைத்தார். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா, இந்த இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கெனவே இருவரும் கொலை வழக்கில் சிறையில் இருப்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து கந்தன், நகர காவல் ஆய்வாளர் செளந்தரராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை சென்னை புழல் சிறைத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.