மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) திறக்கப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டனர்.
91ஆவது கலங்கரை விளக்க தினத்தையொட்டி, கடங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியங்களுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனர். அவர்கள் இந்தக் கட்டடங்களைப் பார்வையிட கட்டணமின்றி இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து லைட் ஹவுஸ் பாதுகாப்பு அலுவலர் வசந்த் கூறியது:
இந்தக் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட இந்திய சுற்றுலாப் பயணிகளில் பெரியவர்களுக்கு தலா ரூ.10-ம் சிறியவர்களுக்கு தலா ரூ.5-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ. 25-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலித்து வருகிறோம். வெள்ளிக்கிழமை கலங்கரை விளக்க தினம் என்பதால் அன்று மட்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலங்கரை விளக்கத்தை பார்வையிட்டுச் சென்றனர். கலங்கரை விளக்க தினத்தையொட்டி கலங்கரை விளக்கம் மற்றும் பழைய கலங்கரை விளக்க பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளை பணியாளர்கள் மேற்கொண்டனர் என்றார் அவர்.