உலக சுற்றுலா தினத்தையொட்டி, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி இணைந்து மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின. இதில் கல்லூரி மாணவர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் பங்கேற்று, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி சந்தனம், குங்குமம் இட்டும், மாலை அணிவித்தும் வரவேற்றார். அதனையடுத்து, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக சுற்றுலா தின விழிப்புணர்வுப் பேரணியை எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து தொடங்கிய பேரணி, கடற்கரை சாலை, பேருந்து நிலையம், கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஜி.ஆர்.டி. டெம்பிள் பே தனியார் சுற்றுலாப் பயணிகள் விடுதி அருகே முடிவடைந்தது. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் வி.சேகர், டி.ஆர்.டி டெம்பிள்பே நிறுவன பொதுமேலாளர் இளங்கோ ராஜேந்திரன், மாமல்லபுரம் அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி முதல்வர் செ.ராஜேந்திரன், முன்னாள் சுற்றுலா அலுவலர் ராமதாஸ், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கல்லூரி மாணவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப் பணியாளர்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்டோர், சுற்றுலா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். பேரணியின் போது, நையாண்டி மேளத்துடன் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பேரணியில் வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், சுற்றுலா விழிப்புணர்வு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
மாமல்லபுரம் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையில், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.