கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக சாலை வசதி, பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்றும், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கிராமத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அதிருப்தி அடைந்த மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த, வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, சரவணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் கிராம மக்களிடம் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.