கூடுவாஞ்சேரி வட்டாரத்தில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்த நபரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 32 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை தனியாக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸார் துரத்திப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் செங்கல்பட்டை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்து (23) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூடுவாஞ்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்ததோடு சாலையில் நடந்துசெல்லும் பெண்களிடம் சங்கிலியை பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கூடுவாஞ்சேரி போலீஸார் முத்துவை கைது செய்து, அவரிடமிருந்த 32 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை வியாழக்கிழமை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.