விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் மீது திமுக வழக்குரைஞர்கள், தேர்தல் பொதுப் பார்வையாளர் யோகேஷ் மகசியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குரைஞர்கள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் தேர்தல் பொதுப் பார்வையாளர் யோகேஷ் மகசி, காவல்துறைப் பார்வையாளர் சிவகுமார் வர்மா ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.15) மக்களவை திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய காலை 10 மணிக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. அவரை வரவேற்க நாங்கள் திரண்டிருந்தோம். அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேரடி பகுதிக்கு வர இருந்தார்.
இதைத் தொடர்ந்து, திமுக அனுமதி பெற்ற இடத்தில் திடீரென அதிமுகவினர் பலரும் கட்சிக் கொடியுடன் அப்பகுதியில் குவிந்தனர். இது தொடர்பாக, விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகத்திடம் புகார் தெரிவித்தோம். ஆனால், அவர் அதிமுகவுக்கு சாதகமாகச் செயல்பட்டார். அவ்வாறு செயல்பட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.