காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் கருட சேவை ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள வைணவ திவ்ய தேசங்களில் இக்கோயில் 75-ஆவது திவ்ய தேசமாக விளங்குகிறது. இக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 19-ஆம் தேதி காலை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின், சனிக்கிழமை ஹம்ச, சூரியப் பிரபை வாகனங்களில் எழுந்தருளினார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கருட வாகனத்தில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளி, மாடவீதிகளில் வீதியுலா வந்தார். மாலை ஹனுமந்த வாகனத்தில் பவனி வந்தார். கருட சேவை உற்சவத்தில் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நாள்களில் சேஷன், யாளி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா புறப்படவுள்ளார். வரும் 25-ஆம் தேதி தேரோட்டம் விமரிசையாக நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, திருப்பாதம், ஆள்மேல் பல்லக்கு, துவாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம், சக்கரக்கோடி விமானம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறவுள்ளன. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அஷ்டபுஜப் பெருமாள் ஆன்மிகக் குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.