தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் அத்திவரதரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்திவரதப் பெருமாளைத் தரிசிக்க தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். பெருமாளை தரிசிக்க பக்தர்கள் நீண்ட நேரம் பொதுதரிசனப் பாதையில் காத்திருப்பதால் அவர்களது பசியைப் போக்கும் வகையில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கோயில் நுழைவு வாயில் பகுதியில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயிலின் கிழக்கு மாடவீதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பணியாளர் எஸ்.சீனிவாசன் என்பவர் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீசுபதேந்திர தீர்த்த சுவாமிகளின் ஆலோசனையின் படி, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தலைவர் ஆர்.சேதுராமனின் வழிகாட்டுதலின்படியும் அன்னதான சேவை நடந்து வருகிறது.
இதுகுறித்து மதுரை புதூரை சேர்ந்த கவிதா திருமலை என்பவர் கூறுகையில், பொதுதரிசனப் பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து குழந்தைகளுடன் வந்த போது பசி மயக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிறைய சாம்பார் சாதம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது மிகுந்த மனநிறைவைத் தந்தது. பசியும், உடல் களைப்பும் நீங்கியது என்றார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பணியாளர் எஸ்.சீனிவாசன் கூறியது: பக்தர்களுக்கு மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் சுமார் 7 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.