ஏனாத்தூரில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரி டீன் நீலாம்பிகை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கிற்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் அன்பரசு, கண்காணிப்பாளர் ராஜா முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட இந்தியக் குழந்தைகள் மருத்துவச் சங்கத்தின் செயலர் முரளிகிருஷ்ணன் வரவேற்றார்.
கருத்தரங்கில் குழந்தைகள் நல மருத்துவர்கள் ராம்பிரகாஷ், சித்ரா, மது மற்றும் உபைத் ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினர். குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.நிவேதிதா நன்றி கூறினார்.