மதுராந்தகத்தை அடுத்த கினார் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்டமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதியோர் உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கினார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் வட்டாட்சியர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில் கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மனுக்களை வட்டாட்சியர் ஜெயசித்ராவிடம் அளித்தனர்.
மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு, துறை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.