ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இந்த நினைவிடத்தில் இருந்து தொடங்கி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் பிரகாசம் தலைமையில், தில்லியில் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள வீர் பூமி வரை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை செல்வது வழக்கம்.
28-ஆம் ஆண்டு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஜோதியை ஏற்றி, யாத்திரையைத் தொடங்கி வைத்துப் பேசியது:
இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர் ராஜீவ்காந்தி, குறிப்பாக அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர். இலங்கைத் தமிழர்களுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்த கட்சி காங்கிரஸ் கட்சி. இலங்கைத் தமிழர்களுக்காக ஒருலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வி கற்க மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் டி.காதர், ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் மனோகரன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவர் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் அருள்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
வரும் 20-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 76-ஆவது பிறந்தநாளாகும். அதை முன்னிட்டு, மத நல்லிணக்க ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கி, ஆந்திரம், ஒடிஸா, உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் வழியாக சாலை மார்க்கமாகச் சென்று, தில்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் வரும் 19-ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் ஜோதி சமர்ப்பிக்கப்படும் என காங்கிரஸார் தெரிவித்தனர்.
படம்: ஜோதியை ஏற்றி யாத்திரையைத் தொடங்கி வைத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.