காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழாவின் 45 -ஆவது நாளான புதன்கிழமை பெருமாள் காட்சியளிக்கும் வஸந்த மண்டபம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த 45 நாள்களாக நடந்து வருகிறது. இன்னும் 3 நாள்கள் மட்டுமே விழா நடக்க இருக்கும் நிலையில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.இந்த நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்தமண்டபம் அருகிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது.
கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மின் கசிவைத் தடுக்க கேஸ் சிலிண்டர் மூலமாக வாயுவை பீய்ச்சியடித்தனர். இதனால் திருக்கோயில் வஸந்த மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் அருகேயுள்ள பகுதிகள் புகை மண்டலமாகக் காட்சியளித்தன. இதன் காரணமாக அப்பகுதியில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களும் பதற்றமடைந்தனர். இதில் உயிரிழப்புகள் ஏற்படாமலும், பெரும் பாதிப்புகள் இல்லாமலும் சமயோசிதமாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.