வளர்புரம் பகுதியில் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்த கொரிய நாட்டு மாணவர்களின் தன்னார்வத் தொண்டு முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில், கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் மோபிஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருடந்தோறும் இந்தியா வரும் கொரிய நாட்டு மாணவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தன்னார்வத் தொண்டு முகாம்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருடம் இந்தியா வந்துள்ள கொரிய மாணவர்கள், பிளான் இந்தியா மற்றும் ரியல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வளர்புரம் பகுதியில் தன்னார்வத் தொண்டு பணிகளில் கடந்த 9 நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதில் கொரிய மாணவர்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கொரிய மாணவர்களின் தன்னார்வத் தொண்டு முகாமின் ஒரு பகுதியாக ஹுண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சார்பாக வளர்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ. 5 லட்சத்தில் இலவசமாக வீடு கட்டித் தந்ததோடு, ரூ. 4.24 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் 16 அரசு தொடக்கப்பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கொரிய நாட்டு மாணவர்களின் தன்னார்வத் தொண்டு முகாம் நிறைவு விழா வளர்புரம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையின் இயக்குநர் இயான் வூ லீ கலந்துகொண்டு வளர்புரம் கிராமத்தை சேர்ந்தவருக்கு வீட்டு சாவியை வழங்கினார்.
இதில் ரியல் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் லாரன்ஸ், வளர்புரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் யேசுபிள்ளை, அரசுப் பள்ளி தலைமையாசிரியை லில்லிரோஸ்லின், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கோமதி, கோதை மற்றும் கொரிய நாட்டு தன்னார்வ தொண்டு மாணவர்கள், வளர்புரம் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.