அத்திவரதர் பெருவிழாவில் காவல்துறையினர் பக்தர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட இருப்பதாகவும், விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் பலர் மிக முக்கியஸ்தர்களுக்கான அனுமதி அட்டை வைத்திருந்தும் எங்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. பக்தர்களிடம் தரக்குறைவாகப் பேசியதையும் அவர்களிடம் காவல்துறையினர் நடந்து கொண்ட விதத்தையும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார் விடியோ எடுத்த போது செல்லிடப்பேசியைப் பறித்து வைத்துக் கொண்டு மிரட்டினர். மிரட்டும் போலீஸாரின் சட்டையில் பெயர் இல்லை.
அரசு அதிகாரிகள் மட்டுமே அவர்களுக்குரிய ஜீப்புகளில் செல்ல வேண்டும்.ஆனால் காவல்துறையினர் ஜீப்புகளில் அவர்களது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்தனர்.
தங்களுக்கு வேண்டியவர்களை அனுமதி அட்டை இல்லாமலும் அனுமதித்தனர்.ஆனால் அனுமதி அட்டை வைத்திருந்தவர்களை அனுமதிக்கவில்லை. எனவே காவல்துறையின் அத்துமீறிய செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்குத் தொடருவோம்.
காவல்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார், பொதுச்செயலாளர் லோகு, நகரத் தலைவர் ஆர்.வி.குப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.