காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பட்டாங்குளத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து யாகசாலைப் பூஜைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தன. திங்கள்கிழமை யாகசாலையில் மகாபூர்ணாஹுதி தீபாராதனை முடிந்து புனிதநீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் லட்சுமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவினை முன்னிட்டு லட்சுமி விநாயகர் இரவு முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினரும்,கிராம மக்களும் செய்திருந்தனர்.