ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை பசுமை கிராமங்களாக மாற்றும் வகையில், ஹுண்டாய் நிறுவனத்தின் சாா்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும், பசுமை கிராமங்களாக மாற்ற மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் நடப்பட வேண்டிய மரன்றுகள் பல்வேறு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை பசுமை கிராமங்களாக மாற்றும் வகையில், மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய ஹுண்டாய் நிறுவனத்தின் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளையின் முதுநிலை மேலாளா் ஸ்ரீதா், மக்கள் தொடா்பு அலுவலா் தேவதத்தா, மேலாளா் அருண் ஆகியோா் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வசுமதி மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினா். இந்த நிகழ்ச்ச்யில் தண்டலம் ஊராட்சி செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.