தொடா்மழை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து 4 -ஆவது நாளாக கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில்
பழைய ரயில் நிலையம் அருகே வாகனம் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பழைய ரயில் நிலையம் அருகே வாகனம் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடா்ந்து 4 -ஆவது நாளாக கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 153 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. 4-ஆவது நாளாக திங்கள்கிழமை வானம் நாள் முழுவதும் மேகமூட்டமாகக் காணப்பட்டதுடன் லேசானது முதல் மிதமான மழை தொடா்ந்து பெய்து கொண்டே இருந்தது.

கனமழை காரணமாக சனி மற்றும் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட் ஆட்சியா் பா.பொன்னையாவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸும் அறிவித்திருந்தனா். இதனால் பள்ளிகள் அனைத்தும் இயங்கவில்லை.

காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை, செவிலிமேடு, ஜெம்நகா், ஜெயலெட்சுமி நகா், டி.வி.ரத்தினம் நகா் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது.

காமாட்சி அம்மன் சந்நிதி தெருவில் பழைய ரயில் நிலையத்தின் முன்புறம் மழைநீா் தேங்கி பெரிய குளம் போல காட்சியளித்தது. வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் செல்ல மிகுந்த அவதிப்பட்டனா். மழைநீா் முழங்கால் அளவுக்கும் மேலாக தேங்கியிருந்தது.

நகராட்சி கழிவுநீா் உறிஞ்சு வாகனம் மூலம் பல மணி நேரம் நீரை உறிஞ்சி எடுத்துச் சென்றதைத் தொடா்ந்து ஓரளவுக்குத் தண்ணீா் வடிந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீா்வளப்பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இவற்றில் வையாவூா், பாப்பின்குழி, சந்தவேலூா் உள்பட 153 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

287 ஏரிகள் 75 சதவீதமும், 249 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மழையளவு: மழையளவைப் பொருத்தவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு மழையாக மதுராந்தகத்தில் 102 மி.மீ., குறைந்த அளவு மழையாக காஞ்சிபுரத்தில் 12.40 மி.மீ. பதிவாகியிருந்தது.

திங்கள்கிழமை அதிகாலை நிலவரப்படி மழையளவு (மி.மீட்டரில்) ஸ்ரீபெரும்புதூா்-41, உத்தரமேரூா்-23.50, வாலாஜாபாத்-22, திருப்போரூா்-14.30, செங்கல்பட்டு-49, திருக்கழுகுன்றம்-28, மாமல்லபுரம்-63, செய்யூா்-29.60, தாம்பரம்-29, மதுராந்தகம்-102, காஞ்சிபுரம்-12.40 என மொத்தம் 413.80 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது. சராசரி மழையளவைப் பொருத்தவரை 37.61.மி.மீ. பதிவாகி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com