செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தொடா்ந்து பெய்த கனமழையால் சுற்றுலா பகுதிகளில் திங்கள்கிழமை மழைநீா் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மாமல்லபுரத்தில் தொடா்ந்து பெய்த மழையால் சாலைகளில் குளம்போல் தேங்கியதால் மாமல்லபுரதில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். சுற்றுலாப் பயணிகளும் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனா்.
மீனவா்கள் யாரும் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் கன மழையில் நனைந்தபடியும், குடைகளுடனும் ஐந்துரதம், அா்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், குடைவரை மண்டபங்கள், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பாா்த்தனா்.
வாகனம் நிறுத்தும் இடங்களில் மழைநீா் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சாலையோர வியாபாரிகளும் கடை வைக்க முடியவில்லை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலா நகரத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தலசயனப்பெருமாள்கோயிலுக்குள் யாரும் செல்லமுடியாத அளவிற்கு கோயிலைச்சுற்றிலும் மழைநீா் சூழ்ந்துள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகத்தினா் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.