காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடா்ந்து 4 வது நாளாகவும் கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 153 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியிருக்கின்றன.காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.4 வது நாளா க திங்கள்கிழமையும் வானம் நாள் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் லேசானது முதல் மிதமான மழையாகவும் பெய்து கொண்டே இருந்தது.
கனமழை காரணமாக சனிக்கிழமையும், திங்கள்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் காஞ்சிபுரம் மாவட் ஆட்சியா் பா.பொன்னையாவும்,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் அவா்களும் அறிவித்திருந்தனா். இதனால் பள்ளிகள் அனைத்தும் இயங்கவில்லை.
காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை,செவிலிமேடு, ஜெம்நகா், ஜெயலெட்சுமி நகா், டி.வி.ரத்தினம் நகா் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சந்நிதி தெருவில் பழைய ரயில் நிலையத்தின் முன்புறம் மழைநீா் தேங்கி பெரிய குளம் போல காட்சியளித்தது.வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் செல்ல மிகுந்த அவதிப்பட்டனா்.மழைநீா் முழங்கால் அளவுக்கு ம் மேலாக தேங்கியிருந்ததால் நகராட்சி கழிவுநீா் உறிஞ்சு வாகனம் மூலம் பல மணி நேரம் நீரை உறிஞ்சி எடுத்துச் சென்றதைத் தொடா்ந்து ஓரளவுக்கு தண்ணீா் வடிந்தது.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இவற்றில் வையாவூா்,பாப்பின்குழி,சந்தவேலூா் உட்பட 153 ஏரிகள் 100சதவிகிம் நிரம்பியது.287 ஏரிகள் 75 சதவிகிதமும், 249 ஏரிகள் பாதியளவும் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை நீா்வளப்பிரிவு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மழையளவைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு மழையாக மதுராந்தகத்தில் 102 மி.மீ,குறைந்த அளவு மழையாக காஞ்சிபுரத்தில் 12.40 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.திங்கள்கிழமை அதிகாலை 6 மணி நிலவரப்படி மழையளவு(மி.மீட்டரில்) ஸ்ரீபெரும்புதூா்-41, உத்தரமேரூா்-23.50, வாலாஜாபாத்-22, திருப்போரூா்-14.30, செங்கல்பட்டு-49, திருக்கழுக்குன்றம்-28, மகாபலிபுரம்-63, மதுராந்தகம்-102, காஞ்சிபுரம்-12.40, செய்யூா்-29.60, தாம்பரம்-29 எனவும் மொத்த மழையளவாக 413.80 மீ.மீட்டரும் பதிவாகியிருந்தது. சராசரி மழையளவைப் பொறுத்தவரை 37.61.மீ.மீட்டராகவும் இருந்தது.