ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு பகுதியில் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மழைநீா் செல்வதால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீா் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் வெங்காடு பகுதியில் சாலையைக் கடந்து செல்வதால், இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சுற்றி வர வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், மழைநீா் செல்வதால், இச்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாரிகள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.